சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகையில் தண்ணீர் திறக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள் கிழமை (அக். 22) மானாமதுரையில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் சனிக்கிழமை தெரிவித்தது: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் பெரும்பகுதி வைகையாற்றுப் பாசனத்தை நம்பித்தான் விவசாயம் நடைபெறுகிறது. வைகை அணையிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது.
எனவே சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும். வைகையாற்றில் மணல் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மானாமதுரையில் காந்தி சிலை முன்பு அக்.22 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த கட்சியின் ஒன்றியக்குழு தீர்மானித்துள்ளது என்றார்.