சிவகங்கை மாவட்டத்தில் 5 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை உள்பட 5 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (செப். 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி மற்றும் காளையார்கோவில் ஆகிய 5 வட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.11) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இவைதவிர, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.