பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அவர் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து வகையான நலத்திட்ட உதவிகளும் கடைமடை பகுதியில் உள்ள பயனாளிக்கும் சென்று சேர வேண்டும். அதற்கு அரசு துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து வரும் மனுக்கள் மற்றும் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 9 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.81,665 மதிப்பீட்டில் நலத்திட்டத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.லதா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.