தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் சி.எம்.துரைஆனந்த் தலைமை வகித்தார். முன்னாள் நகர் மன்றத் தலைவர் லெ.சாத்தையா, தெற்கு ஒன்றியச் செயலர் எம்.ஜெயராமன், அவைத் தலைவர் மதார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுகவினர் சிவகங்கை-மேலூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் சிவகங்கை முன்னாள் நகர் மன்ற தலைவர் கே.நாகராஜன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ஆதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி: காரைக்குடியில் அதிமுக சார்பில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் தலைமையில் நகரச் செயலாளர் சோ. மெய்யப்பன், மாவட்ட துணைச்செயலாளர் கற்பகம் இளங்கோ மற்றும் அதிமுக நிர்வாகிகள்அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமையில் மாவட்டப் பொருளாளர் சுப. துரைராஜ், இளைஞரணி செயலாளர் செந்தில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா, திமுக நகரச்செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சே. முத்துத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்தலைவர் சாமி. திராவிடமணி தலைமையிலும், அண்ணா தமிழ்க்கழகம் சார்பில், அதன் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் காந்திசிலை அருகே கூடிய அதிமுகவினர் ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணாசிலையை அடைந்தனர். அண்ணாசிலைக்கு மாவட்ட ஜெ,பேரவைச் செயலாளர் அசோகன், நகரச் செயலாளர் இப்ராகிம்ஷா, ஒன்றியத் துணைச் செயலாளர் சி.எம்.முருகேசன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் கரு.சிதம்பரம் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோ.சண்முகவடிவேல் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாசிலையினை அடைந்து, சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, முகமதுகனி, முன்னாள் பேரூராட்சிமன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா, ஒன்றியத் துணைச் செயலாளர்கள் முத்துராமன், சரசுசந்திரன், அவைத்தலைவர் திருநாவுக்கரசு, மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.