தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை சிவகங்கையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.பசும்பொன், கலை பண்பாட்டுத்துறை மதுரை மண்டலத் திட்ட அலுவலர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன், சிவகங்கை மக்களவை உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றோர் விவரம்-கவிதைப் போட்டியில் சிவகங்கை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி எ.அபிதா, கட்டுரைப் போட்டியில் பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி மாணவி நா.சுகாசினி, பேச்சுப் போட்டியில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி மாணவர் ரெ.லட்சுமி நாராயணன், பரதநாட்டியப் போட்டியில் கணேஷ், தமிழிசை வாய்ப்பாட்டு போட்டியில் இ.ஆர்த்தி ஆகியோர் முதல் பரிசுகளைப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள்,கலை பண்பாட்டுத் துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.