மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விரும்பும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், வேளாண் பணிகளை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல் மற்றும் அவற்றை வாடகைக்கு வழங்கும் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், 2018-2019 ஆம் ஆண்டுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் இயந்திரம், சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான் உள்ளிட்டவற்றை மானிய விலையில் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்த தகவல்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் அல்லது சிவகங்கையில் உள்ள அரசு போக்குவரத்துப் பணிமனை அருகில் உள்ள உதவிச் செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.