அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க தாமதம் ஏற்பட்டதால் பெரியகுளத்தில் 2 அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
ஆண்டிபட்டி அருகே கண்டமனூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). ராணுவ வீரர். இவர் 8.2.2014 அன்று கண்டமனூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசுப் பேருந்து மோதி உயரிழந்தார். இதற்கு நஷ்டஈடு வழங்கக் கோரி அவரது மனைவி பாண்டிச்செல்வி பெரியகுளம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரணைக்குப் பின் 10.11.2016 அன்று அவரது குடும்பத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ. 48 லட்சம் வழங்க நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.
ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழக பெரியகுளம் கிளை நிர்வாகம் நஷ்டஈடு வழங்க தாமதம் ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சுமதி, வட்டி தொகை சேர்த்து ரூ 58,10,000 வழங்க வேண்டும். இல்லையெனில் 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து வியாழக்கிழமை பெரியகுளத்தில் இருந்து மதுரை செல்ல இருந்த பேருந்தும், பெரியகுளத்தில் இருந்து தேனி செல்ல இருந்த பேருந்தும் என 2 அரசுப் பேருந்துகளை அமீனா ரமேஷ் ஜப்தி செய்தார்.