மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது, தேனி மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் நதியா (28). இவருக்கும், மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் கபிலன் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சிணையாக நதியாவின் பெற்றோர் 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பில் சீர்வரிசைப் பொருள்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நகைகளை கபிலன் வாங்கி அடகு வைத்து விட்டு, வீடு கட்டிக் கொண்டாராம்.
இந் நிலையில், கபிலன் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவருடன் குடும்பம் நடத்தி வருவது நதியாவுக்கு தெரியவந்ததாம்.
இது குறித்து கேட்டதற்கு கபிலன், அவரது தாயார் சுசீலா ஆகியோர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சிணையாக மேலும் 20 பவுன் தங்க நகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும், தான் குழந்தையுடன் வீட்டில் இருந்து தப்பி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டதாகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரனிடம் நதியா புகார் அளித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், இந்த புகாரின் அடிப்படையில் மனைவியை கொடுமைப்படுத்தியதாக கபிலன், சுசீலா ஆகியோர் மீது தேனி மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.