பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வத்தலகுண்டுவில் சனிக்கிழமை விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.