தேனி மாவட்டத்தில் ஆக. 25-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் 9 இடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை, வழிபாட்டுக்குப்பின் நீர்நிலைகளில் கரைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராகநதியிலும், உத்தமபாளையத்தில் ஞானம்மாள் கோயில் அருகே முல்லைப் பெரியாற்றிலும், கம்பத்தில் சுருளிப்பட்டி சாலையில் சுருளியாற்றிலும் சிலைகளை கரைக்கலாம்.
தேனியில் அரண்மனைப்புதூர் பாலம் அருகே முல்லைப் பெரியாற்றிலும், ஆண்டிபட்டியில் வைகை அணை அருகே வைகை ஆற்றிலும், வருஷநாடு பகுதியில் மொட்டப்பாறை தடுப்பணை அருகே மூல வைகை ஆற்றிலும், போடியில் போடி புதூர் அருகே கொட்டகுடி ஆற்றிலும் சிலைகளை கரைக்கலாம்.
சின்னமனூர் மற்றும் மார்கையன்கோட்டையில் சின்னமனூர்-மார்கையன்கோட்டை சாலையில் முல்லைப் பெரியாற்றிலும் சிலைகளை கரைக்கலாம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.