தேனி மாவட்டத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக போலீஸார் வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி மற்றும் குருபூஜை, விநாயகர் சதுர்த்தி விழா ஆகிவற்றையொட்டி, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 159 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட நபர்களை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி நன்னடத்தை உறுதிச் சான்று பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை செய்து வரும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்குப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர்.