பெரியகுளம் அருகே கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கூறி இருதரப்பை சேர்ந்தவர்கள் மீது தேவதானப்பட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
பெரியகுளம் அருகே காட்ரோடு, நேரு நகரைச் சேர்ந்த விஜய் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 20 பேர் கோட்டார்பட்டியில் உள்ள அய்யனார்கோயிலில் திங்கள்கிழமை இரவு தீபம் ஏற்றுவதற்கு சென்றார்களாம்.
அப்போது கோட்டார்பட்டியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் விஜய் மற்றும் அவரது தரப்பினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அவர் தேவதானபட்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு கெங்குவார்பட்டி மற்றும் காட்ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை நேருநகரை சேர்ந்தவர்கள் தாக்கி கண்ணாடியை உடைத்ததாக கூறி கார்த்திகேயன் என்பவர் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மேலும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 10 பேர் திங்கள்கிழமை இரவு காட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி சாலை மறியிலில் ஈடுபட்ட விஜய் மற்றும் 10 பேர் மீது தேவதானபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.