தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 10 நாள்களாக விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருசநாடு அருகே மேகமலை அருவி உள்ளது. அருவிக்கு கடமலைக்குண்டு மற்றும் மயிலாடும்பாறை வழியாக செல்லலாம். மேகமலையில் பெய்யும் மழைநீர் இந்த அருவியின் வழியாக வந்து மூல வைகையாற்றில் கலக்கிறது. மேகமலையில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்தது.
இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தடைவிதிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் தற்போது அருவியில் பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சீரான நீர்வரத்து வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மேகமலை வனத்துறையினர் தெரிவித்தனர்.