தேனி மாவட்டம் சின்னமனூரில் வியாழக்கிழமை கால்நடைத்துறை அதிகாரியின் கணவர் பூட்டிய வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
சின்னமனூர் அரசு மருத்துவமனை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன்(50). இவரது மனைவி வீரேஸ்வரி, கோவை கால்நடை மருத்துவத்துறையில் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மட்டும் சின்னமனூர் வந்து செல்வாராம். இந்நிலையில் வீரேஸ்வரி வழக்கம் போல் கடந்த திங்கள்கிழமை கோவைக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், சின்னமனூரில் பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக சின்னமனூர் காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் வந்து பூட்டை உடைத்து வீட்டை திறந்து பார்த்தபோது, நாகராஜன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அழுகிய நிலையில் இருந்த சடலத்தை போலீஸார், மீட்டு சின்னமனூர் அரசு மருத்துமவனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.