நிதி ஒதுக்கீடு செய்தும் தூர்வாரப்படாத குளங்கள்: தண்ணீர் தேக்க முடியவில்லை என விவசாயிகள் புகார்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாமரைக்குளம் மற்றும் சீலையம்பட்டி சிறுகுளத்தை முறையாத் தூர்வாராததால் முல்லைப் பெரியாறு பாசன நீரை தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் பாசன நீரை பயன்படுத்தி லோயர் கேம்ப முதல் பழனிச்செட்டிபட்டி வரையில்14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெற்பயிர் விவசாயம் நடைபெறும். இங்குள்ள 17 கால்வாய்களில் திறக்கப்படும் தண்ணீரை லோயர் கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குளங்களில் தேக்கிவைத்தும், கம்பம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் வழியாக செல்லும் உத்தமுத்து கால்வாய், பாளையம் பரவு கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் நேரடியாகவும் பாசனம் மேற்கொண்டு விவசாயப்பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கில் பாசன நீரை தேக்கி வைக்கும் 30-க்கு மேற்பட்ட குளங்கள், அதன் நீர்வழிப்பாதையான 17 கால்வாய்களை முறையாக பராமரிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
உத்தமபாளையம் அடுத்துள்ள தாமரைக்குளம் 199 ஏக்கரிலும், சீலைம்பட்டி - கோட்டூருக்கு இடையே உள்ள சிறுகுளம் 141 ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளன. இந்த குளங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.
50 சதவீதத்திற்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையடுத்து, மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா, உத்தமபாளையம் தாமரைக்குளத்திற்கு ரூ. 2 கோடியும் , சீலைம்பட்டி சிறுகுளத்திற்கு ரூ.70 லட்சமும் 2 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். ஆனால் இந்த இரு குளங்களும் முறையாக தூர்வாரப்படாததால் பழைய நிலையே தற்போது வரையில் தொடர்கிறது. தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது:குளத்தில் இருந்த கருவேல மரங்கள் வெட்டப்பட்டன.
ஆனால் தூர்வாருவது போன்ற எந்த பணிகளும் செய்யவில்லை. தற்போது பருவமழை பெய்து முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் பாசன நீரை சம்பந்தப்பட்ட குளத்தில் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மூலமாக மேற்கொள்ளப்பட்ட பணி விபரங்களை ஆராய வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்தனர்.