தேனி மாவட்டத்தில் வன உரிமைகள் அங்கீகரித்தல் சட்டம் 2006-ன்படி பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடிருப்போர், வன உரிமைகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்துக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 3 தலைமுறையாக அதாவது கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து, வனங்களில் குடியிருந்து வரும் பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போருக்கு வன உரிமைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்துக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தனிநபர் உரிமை பட்டா, வன நிலங்களில் தேன், கடுக்காய், கிழங்கு, மரப்பட்டை, திப்பிலி, கல்பாசி, நன்னாரி வேர் போன்றவற்றை சேகரிப்பதற்கு சமூக வன உரிமை பட்டா வழங்கப்பட உள்ளது.
எனவே, வன உரிமை பட்டா பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.