வீரபாண்டியில் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் உலக மண் வள தின கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் சந்திரசேகரன், தோட்டக் கலை துணை இயக்குநர் கிஷோர் குமார், மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது: மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்வதன் மூலமும், உரமிடுவதன் மூலமும் விவசாயிகள் உற்பத்திச் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம். வேளாண்மைத் துறை சார்பில் செயல்பட்டு வரும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டு தற்போது வரை மொத்தம் 14,600 மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, 71,345 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.