முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகளை கேரள அரசு புதன்கிழமை தொடங்கியுள்ளதால், அணையில் 152 அடிக்கு நீரை தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கு படகு சவாரி செய்ய தேக்கடி வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைக்க கேரள வனத்துறை இடம் தேர்வு செய்தது. இந்த இடம் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால், குமுளியை சேர்ந்த தாமஸ் ஆபிரகாம் கடந்த 2014-இல் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைத்து கொண்டது.
இந்நிலையில் 5.9.2015 அன்று பசுமை தீர்ப்பாயம் ஆனவச்சாலில் பணிகள் செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கில், 2 பேர் கொண்ட ஆய்வுக்குழு அமைத்து, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய தலைமை நில அளவை அலுவலர் சொர்ண சுப்பாராவ் மற்றும் மத்திய வனத்துறை இயக்குநர் சோமசேகர் அப்பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகாததால் ஆனவச்சால் பகுதியில் கட்டடங்கள் இல்லாத வாகன நிறுத்தும் இடம் அமைத்துக் கொள்ள சில தினங்களுக்கு முன் சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாற்காலிக உத்தரவை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து வாகன நிறுத்துமிடத்திற்கான முதற்கட்ட பணிகளை கேரள வனத்துறையினர் புதன்கிழமை தொடங்கினர். நீர்பிடிப்பு பகுதியில் முதல் கட்டமாக தடுப்பு கம்பு வேலிகள், அறிவிப்பு பலகைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் சிக்கல் ஏற்படும் என்று தமிழக விவசாயிகளும், முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினரும் தெரிவித்துள்ளனர்.