பிளாஸ்டிக் கயிறுகள் வரத்தால் பெரியகுளம் அருகே நசிந்து வரும் தென்னை நார் கயிறு உற்பத்தி தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவதானப்பட்டியில் தென்னை நார் கயிறு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். இவர்கள் கொச்சக்கயிறு, பாரக் கயிறு, தண்ணீர் கயிறு, வடக்கயிறு என பல்வேறு வகைகளில் கயிறு உற்பத்தி செய்கின்றனர். இவை தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் கயிறுகளின் வரவாலும், அவற்றின் விலை குறைவு என்பதாலும் பொதுமக்கள் அவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனால் தென்னை நார் கயிறுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து அவை தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக தேவதானப்பட்டியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாற்று தொழில் தேடி சென்று விட்டதாகவும், தற்போது 50 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே நசிந்து கிடக்கும் நார் கயிறு தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தென்னை நார் கயிறு உற்பத்தி செய்யும் மாரியம்மாள் கூறியதாவது: இத்தொழிலை 4 தலைமுறையாக செய்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது போதிய அளவு நார் கயிறு விற்காததால் ரூ. 200 மட்டுமே கிடைக்கிறது. கேரளாவில் இதற்கென்று தனியாக கயிறு வாரியம் அமைக்கப்பட்டு அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து தொழிலை மேம்படுத்தி வருகின்றனர். அதே போல் எங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.