பெரியகுளம் அருகே அகமலைப் பகுதியில் காபியில் காய்த்துளைப்பான் பூச்சி தாக்குதலால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரியகுளம் அருகே 20 கி.மீ. தூரத்தில் உள்ள அகமலை, சின்னூர், ஊரடி, ஊத்துக்காடு ஆகிய மலைக் கிராமங்களில் மலைவாழை, இலவம் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அதே போல் இப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் காபி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை காலமாக உள்ள நிலையில் தற்போது 120 நாள்கள் ஆன காய்களில் காய்த்துளைப்பான் பூச்சிகள் தாக்கியுள்ளன. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு காபி கொட்டை கிலோ ரூ. 250 முதல் ரூ. 260 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு கிலோ ரூ.140 முதல் ரூ. 150 வரையே விலை போகிறது. இதனால் தங்களுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை எனவும், போதிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காய்த்துளைப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகமலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரி காபி பயிர் ஆராய்ச்சி பேராசிரியர் இருளாண்டி கூறியது: காய்த்துளைப்பான் பூச்சிகள் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை எவ்வித உணவும் உட்கொள்ளாமல் வாழும் தன்மை கொண்டவை. மேலும் காயில் ஒட்டிக் கொண்டு பருப்பு உருவாகும் போது அவற்றை பூச்சிகள் உணவாக்கிக் கொள்கின்றன. இதனை முழுமையாக கட்டுப்படுத்த தோட்டங்களில் உள்ள அனைத்து பழங்களையும் பறித்து விட வேண்டும். மேலும் ஆரம்ப காலங்களில் ரசாயன உரங்களையும், பூசாணங்களையும் தெளித்தால் மட்டுமே இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றார்.