தேவாரம் அருகே கோழியை மீட்கச் சென்று சனிக்கிழமை பாழடைந்த கிணற்றில் விழுந்து மூழ்கிய கூலித் தொழிலாளியின் சடலத்தை, 2 ஆவது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
லட்சுமிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டபொம்மன் மகன் வைரவன் (35), கூலித்தொழிலாளி. மேலும், இவர் கிணறு, கண்மாய்களில் மூழ்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், லட்சுமிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் சனிக்கிழமை சில கோழிகள் தவறி விழுந்துவிட்டன. எனவே, அந்த கோழிகளை மீட்டுத் தருமாறு அதன் உரிமையாளர் வைரவனின் உதவியை நாடியுள்ளார்.
அதையடுத்து, கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கிய வைரவன், எதிர்பாராதவிதமாக கயிறு நழுவி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
கிணறு குப்பைகளாலும், புதர்கள் மண்டியும் பாழடைந்து காணப்பட்டதால், வைரவனை காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து தேவாரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் போடி, தேனியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சனிக்கிழமை இரவு வரை வைரவனின் சடலத்தை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2 ஆவது நாளாகவும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சடலத்தை மீட்க முடியவில்லை.
தற்போது, மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கோழிகளை மீட்கச் சென்ற வைரவன் இறந்துவிட்ட நிலையில், கோழிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.