பெரியகுளம் அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, அப்பகுதியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எண்டப்புளி ஊராட்சிக்கு உள்பட்ட ஆரோக்கியமாதா நகரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால், ஞாயிற்றுக்கிழமை கும்பக்கரை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பரணீதரன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.