மத்திய அரசுக்கு எதிராக மக்களை எதிர்க்கட்சிகள்தூண்டி விடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது சரியல்ல என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மிகுந்த அனுபவம் உள்ளவர். மக்கள், தங்கள் பிரச்னைகளுக்காக போராடும் போது எதிர்க்கட்சியினர் அதில் இணைவதும், ஆதரிப்பதும் வழக்கம். அதற்காக எதிர்க்கட்சியினர் மக்களைத் தூண்டி விடுவதாக அவர் கூறுவது ஏற்புடையதல்ல. டிராபிக் ராமசாமி மக்களுக்காக போராடுபவர். அவர் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து பேராட வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் தலித்துகள் படுகொலை செய்யப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.