தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலைக் கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து முறையாக இல்லாததைக் கண்டித்து, அப்பகுதியினர் ஞாயிற்றுக்கிழமை 2 பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு சின்னமனூருக்குச் செல்ல வேண்டும். எனவே, இவர்களுக்கு பேருந்து போக்குவரத்து மிகவும் முக்கியமானதாகும்.
கம்பம் மற்றும் தேனி பணிமனை மூலமாக தலா ஒரு பேருந்துடன் தனியார் பேருந்து என 3 பேருந்துகள் இப்பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் தினமும் 3 முறை இயக்கப்பட்ட இப் பேருந்துகள், தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், ஹைவேவிஸ் உள்ளிட்ட 7 கிராம மக்கள் வெளியூர்களுக்குச் சென்று திரும்ப சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என பலரும் சரியான நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
இது தொடர்பாக, அங்குள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சில நாள்களுக்கு முன் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில், மாவட்ட நிர்வாகம் அந்தந்த போக்குவரத்து பணிமனைக்கு பொதுமக்கள் குறிப்பிடும் நேரத்தில் பேருந்துகளை இயக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், இதை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், போக்குவரத்து இன்னும் முறைப்படுத்தப்பட வில்லை என புகார் தெவிக்கின்றனர்.
பேருந்துகள் சிறைபிடிப்பு: இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகி முத்தையா தலைமையில், மணலாறு தேயிலை எஸ்டேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்கருதி, பேருந்து போக்குவரத்தை அரசு முறைப்படுத்த வேண்டும். பேருந்துகள் பழுதானால் மாற்று பேருந்தை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஹைவேவிஸ் போலீஸார், உரிய நவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, பொதுமக்கள் பேருந்துகளை விடுவித்தனர்.