தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் மா. மகேஸ்வரன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் முகமதுஅலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ச.மோசஸ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மொ. ஞானத்தம்பி ஆகியோர் பேசினர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்றும், ஜக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் இரா. மலர்விழி நன்றி கூறினார்.