தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைப் பணியில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்ளமால் சாலைப் பணிகளை முழுமை பெறச்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டு இருவழிச் சாலையாக தற்போது பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்தச் சாலை கேரளத்துக்குச் செல்லும் முக்கிய சாலை என்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும்
இங்குள்ள சின்னமனூர், உத்தமபாளையம் நகர் வழியாக செல்லும் சாலைகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அந்தந்தப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஏனோ அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மத்தியில் செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி சிறிய பாலங்களைப் பெரிய பாலங்களாக மாற்றி அமைத்தல் , குறுகிய சாலையை விரிவாக்குதல் போன்ற பணிகளை நெடுஞ்துறையினர் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் உத்தமபாளையத்தில் ஏற்கெனவே உள்ள புறவழிச்சாலை சந்திப்பில் சுமார் ரூ.70 லட்சம் செலவில் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாகக் கூறி 150 ஆண்டு கால பழமையான புளிய மரங்களையும் வெட்டி அகற்றினர்.
ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலே முன்பிருந்த அதே அளவிலேயே சாலை போடப்பட்டது. இதனால் உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் 3 பேருந்து நிறுத்தங்களுடன் மிகவும் பரபரப்பாகக் கணப்பாடும் இந்தச் சாலையில் அடிக்கடி வாகனப் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது. இதனால் வாகன
ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் அதிகளவில் அக்கிரமிப்பில் சிக்கியுள்ளதை மீட்டு அகலமான சாலை அமைக்க வேண்டும். மேலும் இரு சக்கரம் உள்ளிட வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தும் வகையில் சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் தேனி மார்க்கமாக செல்லும் சாலையோரத்தில் 7 மீட்டர் அகலத்தில் சாலையை விரிவாக்கம் செய்யப் போவதாக பணி துவங்கிது. ஆனால் இந்தப் பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்தப் பணியால் போக்குவரத்து நெரிசலை எந்தவகையிலும் குறைக்க முடியாது. எனவே அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலையை போடி மார்க்கம் வரையில் நீட்டித்து திட்டத்தை முழுமை பெறச்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உத்தமபாளையம் உதவிக்கோட்டப் பொறியாளர் கிருஷ்ணன் கூறுகையில், முதல் கட்டப் பணியாக துவங்கிய இந்தப் பணி முடிந்த பின்னர், தொடர்ந்து மீதமுள்ள பகுதியிலும் சாலை அமைக்கப்படும் என்றார்.