தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னமனூர் ஒன்றியத்துக்குள்பட்டது அப்பிபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வாரத்துக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், தற்போது 15 நாள்களுக்கு மேலாகியும் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இது குறித்து அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடமும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், பொதுமக்கள் சின்னமனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் போலீஸார், பொதுமக்களிடம் சமாதானம் பேசி மாலைக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாக கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.