தேனி மாவட்டம் உத்தமபாளையம் புனித விண்ணரசி ஆலயத்தில் கருப்புக் கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த மரியலூயிஸ் வேறு ஆலயத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் இவரை மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல மற்றொரு பிரிவினர் இவரை மாற்ற வேண்டும் எனக் கூறினர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலயத்தின் புதிய பங்குத்தந்தையாக டேவிட் சகாயராஜா பொறுப்பேற்க வந்தார். அப்போது எதிர்ப்பு தெரிவிக்க வந்தவர்கள், கருப்பு கொடி கட்டி ஆலயத்தின் முன்பக்க இரும்பு கேட்டை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மற்றும் ஆலோசனைக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த ஆலயத்திற்கு வந்தனர். இவர்களையும் எதிர்ப்பாளர்கள் உள்ளே விட வில்லை. அப்போது அங்கிருந்த போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு எற்பட்டது. பின்னர் உத்தமபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையிலான போலீஸார் பூட்டை உடைத்து ஆலயத்தின் முன்பக்க கதவை திறந்தனர்.
அதன் பின்னர் பேராயர் மற்றும் ஆலோசனைக்குழுவினருடன் புதிய பங்குத்தந்தை ஆலயத்தின் உள்ளே சென்றார். தற்போது ஆலயத்தின் முன் போலீஸார் குவிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.