பெரியகுளம் அருகே வனப் பகுதியில் சருகுமான் வேட்டையாடிய 2 பேரை, தேவதானப்பட்டி வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தேவதானப்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட செலும்பு பகுதியில், தேவதானப்படடி வனச்சரகர் கருப்பையா தலைமையில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரியகுளம், பெரியக்கா நகரைச் சேர்ந்த குணசேகரன் (53), ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த நாகராஜன் (52) ஆகியோர் வனப் பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அவர்களை வனத் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, இரு சக்கர வாகனத்தில் 3 கிலோ எடையுள்ள வேட்டையாடப்பட்ட சருகுமான், நாட்டுத் துப்பாக்கி, தோட்டா, கத்தி, அரிவாள் ஆகியன இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, சருகுமான் வேட்டையாடியதாக குணசேகரன், நாகராஜன் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.