சுருளியாறு மின்வாரிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டுயானைகளால் அங்குள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேகமலை வன உயிரினச் சரணாலயத்துக்குள்பட்ட வண்ணாத்திப் பாறை, வட்ட தொட்டி, அப்பர் கேம்ப், சுருளி அருவி ஆகிய வனப் பகுதிகளில் சிறுத்தை, புலிகள், யானைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கி விட்டதாலும், கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததாலும், இந்த வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்குள்ள காட்டாறுகள், நீரூற்றுகள், குட்டைகள் அனைத்தும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வன விலங்குகள், சுருளியாறு மின் நிலையத்தில் உள்ள ஊழியர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. அதிலும் கடந்த சில நாள்களாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக இந்த குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிகின்றன. இதனால் மின்வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் ஊழியர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
எனவே இந்த குடியிருப்பைச் சுற்றி அகழி அமைக்கவும், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீரை வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.