'வறட்சி பாதிப்பு கணக்கெடுப்பில் விடுபட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் விடுபட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் விடுபட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: ஆண்டிபட்டி பகுதியில் முருங்கை விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளது. எனவே முருங்கைக் காய்க்கு விற்பனை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். வறட்சி பாதிப்பால் வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள குறுகிய கால கடன், 3 ஆண்டுகளுக்குள் செலுத்தும் வகையில் மத்திய கால கடனாக மாற்றித் தரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு 11 சதவிகிதம் வட்டி வசூலிப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய கால பயிர் கடனுக்கு வட்டி வசூலிக்கக் கூடாது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் நிர்வாகம் மூலம் 10 நாள்களுக்கு ஒரு முறை பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்து ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியது: வறட்சி பாதிப்பு கணக்கெடுப்பில் விடுபட்டுப் போன விவசாயிகள், உரிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். அவர்களது விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.
முன்னதாக கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குநர் சி.மூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன், மேகமலை வன உயிரின காப்பாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com