தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கேரள மாநில லாட்டரி விற்பனை அமோகமாக உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு கடந்த 2003 இல் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், தற்போது தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் , ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கேரள மாநில லாட்டரிகள் அமோகமாக விற்பனையாகி வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவித்தது: தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மொத்தமாக வாங்கி வரும் சிலர், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் ரகசியமாக விற்பனை செய்கின்றனர். மேலும், போலியான லாட்டரிகளும் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், கூலி தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, காவல் துறையினர் இது சம்பந்தமாக அவ்வப்போது சிலர் மீது வழக்குப் பதிவு செய்து வருவதை விட்டுவிட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தி மொத்த விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தேனி மாவட்டத்தில் லாட்டரி விற்பனையை முழுவதும் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.