ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை இரவு போர்வெல் வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த போலீஸ் காவலர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஆண்டிபட்டி முத்திரையன்பட்டி விலக்கு அருகில் முன்னால் சென்றுகொண்டிருந்த போர்வெல் வாகனத்தின் மீது மோதியது. இதில், தனியார் பேருந்தில் பயணம் செய்த தேனி ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த காவலர் மணிமுத்து (34), தேனியைச் சேர்ந்த தங்கம் (47), கோவில்பட்டியைச் சேர்ந்த லட்சுமி (37), மணி (40), தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த அம்பிகா (23) உள்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள், க.விலக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக, உசிலம்பட்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பெரியசாமி (31) என்பவர் மீது வழக்குப் பதிந்து, க.விலக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.