தேனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டார்.
கோட்டூர், பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் தங்கராஜ் (52). இவரை, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கஞ்சா விற்றது தொடர்பான பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தங்கராஜை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டார்.