தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அலுவலகத்துக்கு ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற என பல்வேறு தேவைகளுக்காக உத்தமபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருகின்றனர். அதில் பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு அடிப்படை வசதிகளான சுகாதார வளாகம், குடிநீர் உள்பட எவ்வித வசதியும் இல்லை. இதனால் பெண்கள், முதியோர் மிகவும் அவதியடைகின்றனர். பலர் திறந்த வெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.