போடியில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போடி நகராட்சி பகுதியில் காமராஜர் சாலை, பெரியாண்டவர் நெடுஞ்சாலை, மீனாட்சி தியேட்டர் லைன், உத்தமபாளையம் சாலை ஆகிய சாலைகள் முக்கிய சாலைகளாக உள்ளன. இந்த சாலைகளில் அதிக அளவில் வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், இந்த சாலைகளில் கடை வைத்துள்ளவர்கள் சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து அதில் வியாபார பொருள்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். கடைக்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதே போல், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்துகின்றனர். இதனால், சாலையில் இடவசதி குறைந்து, இரண்டு பேருந்துகள் எதிரெதிரே செல்வதற்கு வசதியுள்ள சாலையில் ஒரு பேருந்து மட்டும் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆண்டு தோறும் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களும் சாலையில் செல்லும்போது சிரமத்திற்குள்ளாவதுடன் சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் போடி பகுதியில் அனைத்து சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, சிரமமில்லாத போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.