தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுலாத் துறை சார்பில் கோம்பை- ராமக்கல்மெட்டு இணைப்புச் சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில், வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பேட்டரி கார்களை இயக்குவது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, சோத்துப்பாறை அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது, மேகமலை அணைக்கட்டில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்வது, சுற்றுலாத் தலங்களில் உள்ள தனியார் விடுதிகளை கண்காணிப்பது, கோம்பை திருமலைராயப்பெருமாள் கோயில் பகுதியில் இருந்து ராமக்கல்மெட்டு வரை இணைப்புச் சாலை, மலையேற்ற பயிற்சித் தளம் அமைப்பது ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அபிதா ஹனீப், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.