பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில், ஸ்ரீ ராதா திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நமத்துவார் பிரார்த்தனை மையத்தின் புதிய கட்டடத்தை நவம்பர் 8 ஆம் தேதி ஸ்ரீஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திறந்து வைத்தார். அதன்பின்னர், கம்பம் சாலையில் உள்ள தி.ராமானுஜம் அரங்கத்தில் தினமும் மாலை 6 மணிக்கு பிருந்தாவனமும், நந்தகுமாரனும் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீ ராதா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணத்தை ஸ்ரீஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தி வைத்தார். அதன்பின்னர், மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மைய பக்தர்கள் செய்திருந்தனர்.