ஒட்டன்சத்திரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்தவரை மிரட்டிய அதிமுக (அம்மா) அணி ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சிந்தலப்பட்டியில் உள்ள வத்தால மடைக்குளம் உள்ளது. அங்கு சனிக்கிழமை ஒரு கும்பல் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்துள்ளது.
இதனை அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (29) என்பவர் தனது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த அதிமுக (அம்மா) அணியின் ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சண்முகவேல், அவரது மகன் மனோஜ்குமார் மற்றும் கார்த்திகைவேல், செல்வகுமார், குணசேகரன் ஆகியோர் முருகானந்தத்தை தாக்க முயற்சித்தார்களாம்.
இதுகுறித்து முருகானந்தம் அளித்தப் புகாரின்பேரில் அம்பிளிக்கை காவல் நிலையத்தினர் அதிமுக அம்மா அணி ஒன்றிய செயலாளர் சண்முகவேல் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.