போடி அருகே திங்கள்கிழமை இரவு 150 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞரை, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
போடி அருகே தருமத்துப்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சிவா (16). ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர், மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை இப்பகுதியில் தோட்டத்துக் கிணறு பகுதியில் புறாவை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாராம். இது குறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையிலான வீரர்கள் 2 மணி நேரம் போராடி சிவாவை மீட்டனர்.
கிணற்றில் குப்பைகள் அதிகமாக இருந்ததால் சிவாவுக்கு காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இருட்டில் பயத்துடன் இருந்த சிவாவை போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.