தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதன்கிழமை தனியார் பள்ளி முன் மைத்துனர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொல்ல முயன்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் காளியம்மன்கோயில் தெருவைச்சேர்ந்த தங்கமுத்து மகன் பிருதிவிராஜ்(40). இவரது மனைவி எரசக்கநாயக்கனூரை சேர்ந்த சாமிநாதன் மகள் கெலினா வளர்மதி. இவர்களுக்கு கரண் சஞ்சை (15) என்ற மகன் உள்ளார். இவர் உத்தமபாளையத்திலுள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கிறார்.
இந்நிலையில் பிருதிவிராஜூக்கும், அவரது மனைவி கெலினா வளர்மதிக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். மேலும் விவாகரத்து கோரி வழக்கும் நடைபெற்று வருகிறது. இதனிடையே எரசக்கநாயக்கனூரில் தனது தாயார் வீட்டில் வசித்து வரும் கெலினா வளர்மதியின் மகனை, சகோதரர் அமலா லாரன்ஸ் உத்தமபாளையத்திலுள்ள பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் அழைத்து வருவாராம். இதே போல் புதன்கிழமை காலையில் பள்ளிக்கு தனது சகோதரி மகனை விடுவதற்காக அவர் வந்த போது பள்ளி வளாகம் முன் பிருதிவிராஜ், மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீவைத்து விட்டாராம். இதில் தீக்காயமடைந்த அமலா லாரன்ஸை அருகிலிருந்தவர்கள் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீக்காயம் காயம் 60 சதவீதம் ஏற்பட்டதால் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான பிருதிவிராஜை தேடி வருகின்றனர்.