தேனி அருகே புதன்கிழமை கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே ரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் உதயக்குமார்(24). இவர், தேனி அருகே உள்ள பாலார்பட்டியில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக இயக்கப்பட்ட மின்மோட்டார் பம்பு வயரில் இருந்து, கசிந்த மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.