போடியில் புதன்கிழமை, டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வலியுறுத்தி கொசு வலையுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் மணிகண்டன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவர் சிலையிலிருந்து கொசு வலையுடன் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த நகராட்சி ஆணையர் மா.சுவாமிநாதன், பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்படி போடி நகராட்சியில் 33 வார்டுகளிலும் போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்வோருக்கு டெங்கு தொடர்பான ரத்த பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யவும் உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன், நகர துணைச் செயலர் சத்தியராஜ், அகில இந்திய இளைஞர் பெருமன்ற தாலுகா செயலர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முற்றுகை போராட்டத்தையொட்டி போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் பா.சேகர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.