பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சியில் சுகாதாரத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் அருள் தியேட்டரில் தொடங்கி ஸ்டேட் பங்க் காலனி வரை கீழவடகரை ஊராட்சிக்குள்பட்ட பகுதி ஆகும். இங்குள்ள தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்துக்கு எதிரே உள்ள பெருமாள்புரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததுடன், கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.