தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள மந்தையம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
முதல் நாள் அம்மனுக்கு கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரண்டாம் நாள் வியழக்கிழமை அம்மன் கரகத்துடன், பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர். இரண்டு நாள் விழாவிலும் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. மேலும் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை மேலக்கூடலூர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.