தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அரசுத் துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணிகள், கொசு ஒழிப்பு மற்றும் சுற்றுப்புற தூய்மை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அபிதா ஹனீப், சமூக நல அலுவலர் உமையாள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.