கடந்த 1995 ஆம் ஆண்டு, போலீஸ் காவலில் இறந்த தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் பெரியகுளம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த போது பாண்டியன் இறந்தார். ஆய்வாளர் பாண்டியராஜன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர்தான் பாண்டியனின் இறப்புக்கு காரணம் என உதவி ஆட்சியர் அளித்த அறிக்கையின்படி, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்த நிலையில், ஆய்வாளர் பாண்டியராஜன் இறந்து விட, தனது ஆயுள்தண்டனையை ரத்து செய்யகோரி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தண்டனையை ரத்து செய்தது. இந்நிலையில் போலீஸ் காவலில் இறந்த பாண்டியனின் மனைவி அமராவதி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுதாரரின் கணவர் மரணத்துக்கு தமிழக அரசு ரூ.10.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரருக்கு அரசு இடைக்கால இழப்பீடாக ரூ.1 லட்சம் ஏற்கெனவே வழங்கி உள்ளது. இந்த தொகை போக மீதமுள்ள தொகை ரூ.9.50 லட்சத்தில் மனுதாரருக்கு ரூ.4.50 லட்சம் வழங்க வேண்டும்.
ரூ.2 லட்சத்தை மனுதாரரின் மகனுக்கும், தலா ரூ.1 லட்சத்தை அவரது 3 மகள்களுக்கும் பிரித்து கொடுக்கவேண்டும். 1995 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன், 45 நாள்களுக்குள் இந்த தொகையை வழங்க வேண்டும் எனக்கூறி உத்தரவிட்டார்.