தேனியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காவல் ஆய்வாளரின் மனைவி அணிந்திருந்த 10 பவுன் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முத்துராஜ். இவரது மனைவி உமாதேவி. தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். தேனியில், தேனி- பெரிகுளம் சாலையில் உமாதேவி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் உமாதேவியை பின்தொடர்ந்து வந்த இருவர், பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோயில் அருகே வழிமறித்து, அவர் அணிந்திருந்த 10 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.