" பெருந்தலைவர் காமராஜர்' விருதுக்கு மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு

தேனி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பயிற்சி உதவித் தொகை பெற 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி

தேனி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பயிற்சி உதவித் தொகை பெற 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற,  தனித் திறனுடைய தலா 20 மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய மாவட்ட கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: 2017-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து  10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில்  60 சதவிகித்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று,  கலை, விளையாட்டு, இடைச் செயல்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தலா 20 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பயிற்சி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இதில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும். கல்வி மற்றும் தனித் திறன்களில் சிறந்த மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலா 2 உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 2 கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழு மூலம் பொதுத் தேர்வில் 60 சதவிகிதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் கலை, அறிவியல், விளையாட்டு, நாட்டு நலப் பணித் திட்டம், சாரணர் இயக்கம், சுற்றுச்சூழல் இயக்கம், தேசிய மாணவர் படை போன்ற இடைத் திறன்களுக்கு 40 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவ, மாணவிகள் 20 பேரும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவ, மாணவிள் 20 பேரும் விருது மற்றும் பயிற்சி உதவித் தொகை பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com