சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போடி பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சித்திரை 1 தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போடி-தேனி நெடுஞ்சாலையில் உள்ள தீர்த்தத்தொட்டி ஆறுமுகநாயனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை முதலே இங்கு வந்த பக்தர்கள் தீர்த்த தொட்டியில் நீராடி, முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். போடி, தேனி பகுதியிலிருந்து தீர்த்தத் தொட்டி முருகப் பெருமான் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதே போல் போடியில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலிலும் தமிழ் புத்தாண்டடை முன்னிட்டு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் தலைவர் முத்துச்சாமி, அர்ச்சகர் சேகர் ஏற்பாடுகளை செய்தனர். சுப்பிரமணியசுவாமி கோயில், பிச்சங்கரை மலைப்பகுதியில் உள்ள கீழச்சொக்கநாதர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.